Tuesday, July 3, 2018

கண்ணன் தண்டபாணி - யுவ புரஸ்கார் வாழ்த்து

நண்பர் கண்ணன் தண்டபாணி நான் பெருமதிப்பு கொண்டிருக்கும் காந்திய நண்பர். தீவிர வாசிப்பு வழக்கம் உள்ளவர். காந்தியை வெறுமே வாசிப்பதோடு நிற்காமல் காந்திய வாழ்க்கை வாழ்பவர். 'அம்புப் படுக்கை' தொகுப்பிற்கு என்பதைவிட ஒட்டுமொத்த பங்களிப்பிற்கு அளித்த விருது என மதிப்பிட முடியும் என சொல்கிறார். என்னளவில் சிறுகதை தொகுப்பிற்காக என்றே மதிப்பிடுவேன். புனைவின் பங்களிப்பை பின்னுக்கு தள்ளுவதாக ஆகிவிடக் கூடும்.  எனது வலைப்பூவில் மிக துவக்க காலத்தில் எழுதிய கதைகளை கூட தோண்டி எடுத்து வாசித்து மதிப்பிட்டுள்ளார். அவருடன் இணைந்து சில பணிகளை செய்து கொண்டிருக்கிறேன். எங்கள் நட்பு வருங்காலங்களிலும் தொடரும். நன்றி கண்ணன். 

--
நன்றி- https://urakkacholven.wordpress.com/2018/07/01/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/
சுனில் கிருஷ்ணன்[சுனில் கிருஷ்ணன் ‘காந்தி இன்று’ தளத்தைப் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அதில் காந்தியுடைய ஆக்கங்கள், காந்தி காந்தியம் பற்றிய படைப்புகள் பலவும் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. காந்தி குறித்த பல புதிய கட்டுரைகளும் உள்ளன. படைப்பிலக்கியத்திலும் தொடர்ந்து செயல்பட்டுவரும் சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. சுனில் கிருஷ்ணன் காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவராக உள்ளார்.]நண்பர் சுனில் கிருஷ்ணனுக்கு விருது என்று சென்ற வாரம் அறிந்த போது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தது. மறுபுறம், விருதுவாங்குபவர்களுக்கென்றே உள்ள பிரத்யேகமான சிகிச்சையும் அவருக்குக் கிடைக்குமே என்ற ஒரு அச்சமும் இருந்தது.சுனிலின் ஒருசில கதைகளைத்தான் நான் முன்பு படித்திருக்கிறேன். நம்ம சுனில் தானே என்கிற உரிமையிலோ என்னவோ, முழுமையாகப் படிக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். இவ்விருது தந்த புது உற்சாகத்தில் இணையத்தில் உள்ள அவரது கதைகளில் பெரும்பாலானவற்றைப் படித்துவிட்டேன்.பேசும் பூனை, அம்புப் படுக்கை ஆகிய இரண்டு கதைகளும் குறிப்பிடத்தக்கவை என்று பட்டது.காந்தியவாதிகள் நல்ல இலக்கியம் படைக்கமாட்டார்கள் என்கிற ஒரு முன்முடிவோடு நாம் சுனிலை அணுகவேண்டியதில்லை. (சாரு நிவேதிதா மிகவும் விதந்தோதிய ‘மண்ணில் தெரியுது வானம்’ என்கிற காந்திய நாவலே சற்று தட்டையாகத்தான் எனக்குத் தெரிந்தது. சுனிலின் பாராட்டுவிழாவில் எஸ்.ரா. காந்திக்கு புனைவிலக்கியங்கள் மீதும், இயற்கையின் மீதும்கூட அதிக ஆர்வமில்லை என்று பேசியுள்ளார். அதில் ஓரளவு உண்மையும் (சில தகவல் பிழைகளும்) இருந்தாலும், காந்தி ஹோமர் முதல் கதே வரை படித்திருக்கிறார். எட்வின் ஆர்னால்டின் கவித்துவமான மொழியின் மூலமாகத்தான் அவர் கீதைக்குள் நுழைந்தார். காந்தியின் எழுத்தின் கூர்மையும் தெளிவும் எந்த எழுத்தாளருக்கும் குறைவானதல்ல. ஆனால் அவரது முதன்மையான அக்கறை வேறாக இருந்தது). சுனில் காந்திய ஆர்வலராக இருந்தாலும் தன்னை காந்தியவாதி என்பதையே ஏற்றுக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன். உண்மையில் ‘காந்தியும் நானும்’, ‘ஆரோகணம்’ என்ற அவரது இரண்டு காந்தி கதைகளுமே முன்வைக்கும் காந்தி பற்றிய சில சித்திரங்களும் கேள்விகளும் விவாதத்திற்குரியவை. காந்தியின் கண்முன் ஐந்து வயதுப் பெண் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருந்தால் அவர் காந்தியவாதியாக இருந்திருப்பாரா என்பது காந்தியை அறிய முனையும் நம் எல்லோரின் ஆரம்பகட்ட கேள்வி. இக்கதை எழுதி 8 வருடங்களுக்கு மேல் இருக்கவேண்டும். சுனில் இப்போது இக்கேள்வியை வேறு விதமாக அணுகக்கூடும். ஆரோகணம் கதையில் காந்தி ஹரிலால் பற்றி ‘தனது அன்பும் கருணையும் அவனை ரணப்படுத்தியது’ என்று எண்ணுவதாக வருவதற்கு நேர்மாறாகத்தான் எண்ணியிருப்பார் என்பது என் கணிப்பு. ஹரிலாலுக்கு குழந்தைப்பருவம் முதலே தனது அன்பும் கருணையும் கண்காணிப்பும் போதிய அளவு கிடைக்கவில்லை, அதனாலேயே ஹரிலால் பாதை தவறிவிட்டார் என்கிற எண்ணம் காந்திக்கு உண்டு. ஆனால், ஆரோகணம் கதையின் முடிவில், காந்தி மகிழ்ச்சி நிறைந்த சொர்க்கத்தை மறுத்து இன்னல் நிறைந்த நரகத்தைத் தேர்ந்தெடுப்பதாக வரும் சித்திரம் முதலில் சில ஐயங்களை எழுப்பினாலும், அதிலுள்ள உண்மை மறுக்கமுடியாமல் மேலெழுகிறது. சுதந்திரம் பெறும் தறுவாயிலும், சுதந்திரம் பெற்ற பின்னரும் வெற்றிக்களிப்புக்கு ஒரு கணநேரமும் இடங்கொடாது நவகாளி, கல்கத்தா, பிகார், டில்லி (பின்னர் மேற்கு பாக்கிஸ்தான் செல்லும் திட்டம்) என்று கலவரப் பகுதிகளாகத் தேடிச் சென்று பணியாற்றிய காந்தி நினைவுக்கு வருகிறார்.காந்தியப் பணியையும் படைப்பிலக்கியச் செயல்பாட்டினையும் சுனில் தனித்தனியாகப் பார்க்க விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால் அவரது படைப்புகளில் காந்தியக் கரிசனம் தலைதூக்காமல் இல்லை. அதில் தவறொன்றும் இல்லை, சுனில். பேசும் பூனை கதையை நவீன அறிவியல் பொருளாதார மாற்றங்கள் நம் வாழ்க்கைமீது செலுத்துகிற ஆதிக்கம் குறித்த கதையாக நான் பார்க்கிறேன். நம்மை அறியாமல் நுகர்வு கலாச்சாரமும், அரசாங்க தனியார் கண்காணிப்பும் நம் வாழ்க்கையில் எப்படி ஊடுறுவுகின்றன என்பதை மாய யதார்த்த முறையில் பேசுகிற கதையாகவும் பார்க்கலாம். காந்தியின் வழியே பயணித்துவந்த கரிசனங்கள் தாமே இவை.அம்புப் படுக்கை கதையும் இம்மண்ணின் அறிவியல் மரபுக்கும் நவீன அறிவியல் போக்குகளுக்கும் உள்ள உரசலை மையமாகக் கொண்டுள்ளது. மரபைப் பின்பற்றுகிறவர்கள் மீது சமூகம் முன்வைக்கிற விமர்சனங்களைத் தாண்டி, அவர்களுக்கே தம்மீதும் தமது மரபின் மீது தோன்றுகிற ஐயமும், தெளிவும், தெளிவின்மையும் நன்றாக வெளிப்பட்டுள்ளன. தன் மருத்துவ அறிவை நிலைநாட்டுவதைவிடவும் நாயகனிடம் மானுட நேயம் மேலோங்கி வருவதையும் காணலாம். அதே போல், நக்ர ரேதஸ் கதையில் மருத்துவ நெறிகளுக்கும் தனிப்பட்ட விழுமியங்களுக்கும் ஏற்படுகிற மோதல் கதைப்பொருளாகிறது.வேறு சில கதைகள் எனக்குப் பெரிய திருப்தி தரவில்லை. இணையத்தில் கிடைக்காத ஒரு சில கதைகளை இன்னும் படிக்கவில்லை. குருதிச் சோறு தன்னளவில் நன்றாக இருந்தாலும், தொன்மங்கள் உருவாவது பற்றி நிறைய எழுதியிருக்கும் ஜெயமோகனின் நேரடி பாதிப்பு மேலோங்கியிருக்கிறது. ஜெயமோகனின் பாதிப்பு குறித்து சுனிலுக்கு வருத்தம் எதுவுமில்லை. அவரது வளர்ச்சியில் ஜெயமோகனுக்குப் பெரும் பங்கு இருந்திருக்கிறது. தனிப்பேச்சின்போதும் எழுத்திலும், அசோகமித்திரனும், யுவனும் தன் எழுத்தின்மீது சமமான தாக்கம் செலுத்தியுள்ளார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் பேசும் பூனை போன்ற கதையில் ஜெயமோகனின் தாக்கத்தைத் தாண்டிவந்து அக்கதைக்கென ஒரு மொழியை அடைந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.இலக்கியம் ஒருபோதும் ஒரு சுழியத்தொகை விளையாட்டு (zero-sum game) அல்ல. ஆனால் விருதுகள் நம்மை அக்குறுகிய வீதிக்குள் தள்ளுகின்றன. சுனிலுக்கு இணையான, சுனிலை விட மேலான இளம் படைப்பாளிகள் இருக்கலாம் – சமகாலப் புனைவுகளை நான் அதிகமாக உடனுக்குடன் படித்துவிடுகிறவன் இல்லை என்பதால் அது குறித்துக்கூற எனக்கு அதிகமில்லை. ஆனால் சுனிலின் பங்களிப்பு, இக்கதைகளையும் தாண்டி இன்னும் பெரிய பரப்பில் உள்ளது. எவராலும் தவிர்க்கமுடியாதது. (இதைச் சொல்வது அவரது இலக்கிய மனதுக்கு அவ்வளவு உவப்பாக இல்லாமற்போகலாம். உண்மையில் விருது அவரது சிறுகதைத் தொகுப்புக்காக மட்டுமே கொடுக்கவும்பட்டிருக்கலாம்.) பொதுவாக சாகித்ய அகாதெமி விருது தமிழில் ஒரு தனிப்பட்ட படைப்புக்குக் கொடுக்கப்பட்டாலும், ஒற்றைப் படைப்பு என்பது ஒரு proxyதான். பெரும்பாலும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கே அளிக்கப்பட்டுவருகிறது. யுவ பரஸ்கார் விருதும் அவ்வாறு தரப்பட்டால் அதில் தவறெதுவும் இல்லை. எழுத்துலகில் வாழ்நாள் சாதனை செய்தவர்கள் என்று சொல்லக்கூடிய இளைஞர்கள் அதிகம் இருக்கமுடியாது. சுனில் அத்தகைய ஓர் அரிய இளைஞர். காந்தி குறித்தும், காந்தியம் குறித்தும், மாற்று அரசியல் பொருளாதாரம் கல்வி குறித்தும் ஒரு மறுவாசிப்பையும், புது ஆர்வத்தையும் பல தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியதில் சுனில் கிரூஷ்ணன், ராட்டை ரகு போன்றவர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இவர்கள் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஓரிடத்தில் தொகுத்திருக்கிறார்கள். தீவிர புனைவிலக்கியம் என்கிற சிறிய வட்டத்தைத் தாண்டி, தமிழ் எழுத்துலகுக்கும், தமிழ் அறிவுலகுக்கும் இது ஒரு மாபெரும் பங்களிப்பு. மாற்று குறித்துப் பேசுகிறவர்கள் மத்தியிலும் சுனில் அதை ஒரு மூர்க்கமான கொள்கையாக முன்வைக்காமல், அமைதியாக தர்க்கப்பூர்வமாக அணுகுகிறார். எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே சொன்னால், சுனில் மூலமாகத்தான் நாராயண் தேசாய், க.மு.நடராஜன், சங்கீதா ஸ்ரீராம் போன்றவர்களுடனான தொடர்பினை என்னால் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. சுனில் தந்த அழுத்தத்தால் தான் நாராயண் தேசாயுடனான நேர்காணலை நான் எழுதியும் பதிப்பிக்கவும் முடிந்தது. இவை மேலும் பல புதிய பயணங்களுக்கு இட்டுச்சென்றன. (எக்குத்தப்பான ஒரு நிகழ்ச்சியில் மாட்டியும் விட்டிருக்கிறார்.) இதுபோல் பலருக்கும் பல திறப்புகள் நிகழக் காரணமாக இருந்திருக்கிறார், இருப்பார்.ஆயுர்வேதம் குறித்த அவரது கட்டுரைகளும் ஆழ்ந்த வாசிப்பைக் கோருபவை. பதாகை இதழில் பாஸ்கரோடு சேர்ந்து அவரது பங்களிப்பு கணிசமானது என்பதை நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால் ஆகியோருடன் கோவையில் நண்பர்களோடு நடத்திய நீண்ட நேர்காணல்களின் போது உணர்ந்தேன். சுனில் பற்றிய பாஸ்கரின் குறிப்பிலும் அதைக் காணலாம்.இதற்கு முந்தைய பல ஆண்டுகளில் யுவ புரஸ்கார் (அல்லது சாகித்ய அகாதெமி) விருது பெற்ற பலரும் தொடர்ந்து தீவிரமாக எழுதாமற் போயிருக்கலாம். ஆனால் இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழ் எழுத்துலகுக்குப் பங்களிக்கக்கூடிய ஆற்றலும் ஆர்வமும் சுனிலுக்கு இருப்பதாய் நினைக்கிறேன். இப்போது அவர் தொகுத்துவரும் தமிழ் இலக்கியத்தில் காந்தி குறித்த பதிவுகள் முக்கியமான ஒரு முயற்சி. (நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறேன் என்பதால் மட்டும் சொல்லவில்லை.)அவரது இலக்கிய, காந்தியப் பணிகள் மென்மேலும் கவனம் பெற இந்த விருது உதவும் என்பதால் இது மிகவும் முக்கியமானதே. சுனில் கிருஷ்ணனுக்கு ஒரு வாசகனாகவும், மூத்த நண்பனாகவும், சக பயணியாகவும் எனது வாழ்த்துகள்.

No comments:

Post a Comment