Tuesday, July 3, 2018

நட்பாஸ் வாழ்த்து

'அம்புப் படுக்கை' தொகுப்பை நான் இருவருக்கு சமர்ப்பணம் செய்திருப்பேன். ஒருவர் தந்தைக்கு நிகரான ஜெயமோகன். மற்றொருவர் ஆசிரியருக்கு நிகரான நட்பாஸ் என்றே குறிப்பிட்டு இருப்பேன். இன்றுவரை நான் எழுதும் எதையும் எழுதி முடித்தவுடன், (சில நேரங்களில் எழுதிக் கொண்டிருக்கும்போதேகூட) அவருக்கு அனுப்புவதே என் வழக்கம். மொழியை சிந்தனையை செம்மையாக்குவதில் பங்களிப்பு ஆற்றியவர். காந்தி- இன்று, ஆம்னிபஸ், பதாகை, சொல்வனம் என அவருடன் இணைந்து பயணித்திருக்கிறேன். சில நேரங்களில் கடுமையாக அவருடன் முரண்படவும் கோபித்துகொள்ளவும் நேர்ந்திருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் நியாயம் அவர் பக்கம் இருக்கும். ஆனால் ஒருமாதிரி சமாதானம் அடைந்து எங்கள் பயணம் தொடர்கிறது. தமிழ் இணைய உலகை மேம்படுத்தியதில் பாஸ்கரின் பங்களிப்பு முக்கியமானது. என்னைப்போன்ற பல எழுத்தாளர்கள் தங்கள் முதல் டிராப்டை அனுப்பி கருத்து கேட்கும் நபராக இன்றளவும் பாஸ்கரே உள்ளார். தனிப்பட்ட நம்பிக்களுக்கு அப்பால் சென்று படைப்பை மதிப்பிடும் பண்பு அவரிடம் உள்ளது. தன்னை ஒருபோதும் அவர் முன்னிறுத்திக் கொண்டதில்லை. என்றாவது ஒருநாள் பாஸ்கரைப் பற்றி விரிவாக எழுத வேண்டும். இந்த வாழ்த்துக்கு நன்றி. 
--
ஒரு சிறு வாழ்த்துரை 
நன்றி - https://livelyplanet.wordpress.com/2018/06/22/yuva-puraskar/

நண்பர் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு ‘யுவ புரஸ்கார் விருது’ கொடுக்கப் போகிறார்கள் என்ற செய்தி படித்தேன். மிக மகிழ்ச்சியான விஷயம்.

சுனில் கிருஷ்ணன் பொது புள்ளியைக் கண்டடைந்து உரையாடுபவர், பொறுமை மிக்கவர். இதைச் சொல்ல வேண்டுமா என்றால், ஆமாம். ஒன்றுமில்லாத விஷயத்துக்கு எல்லாம் சிலிர்த்துக் கொண்டு அதற்கு தார்மீக நியாயம், அறச் சீற்றம் என்றெல்லாம் முத்திரை குத்தி நட்பை முறித்துக் கொள்ளும் சூழலில் இந்த இரு குணங்களும் மிக முக்கியமாக இருக்கின்றன, அதுவும் இளைஞர்களுக்கு. அவ்வகையில் அவர் ஒரு முன்மாதிரி.

இரண்டாவதாக, சுனில் கிருஷ்ணன் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். பதாகை இதழில் வந்த ‘புதிய குரல்கள்‘ தொடரின் நேர்முகங்கள் மற்றும் நூல் வாசிப்பு அத்தனையும் அவரது பங்களிப்பு மட்டுமே. எந்த ஒரு ஊக்குவிப்பும் இல்லாமல் தன்னார்வம் கொண்டு மட்டுமே அதைத் தொடர்ந்து செய்து வந்தார். “உங்களிடம் ஒரு நேர்முகம் வேண்டும்,” என்று கேட்கும் ஒவ்வொரு சமயமும் “இப்போது வேண்டாம்,” என்று மறுத்தே வந்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவருக்கு யுவ புரஸ்கார் அளிக்கும் அடையாளம் இன்னும் பல இளம் எழுத்தாளர்கள் வெளிச்சத்துக்கு வரவும் அங்கீகாரம் பெறவும்  சிறிதளவேனும் உதவும் என்று நம்புகிறேன். இதுவும் சாதாரண விஷயமில்லை. காந்தியானாலும் சரி, தன் கதையானாலும் சரி, அதில் எல்லாம் எவ்வளவு முனைப்பு காட்டினாரோ அதே முனைப்பை பிறர் எழுத்தை முன்னிலைப்படுத்துவதிலும் காட்டி வந்திருக்கிறார். அந்த வகையில், இவ்வாண்டு, யுவ புரஸ்கார், சரியான நபரிடமே சென்று சேர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

நண்பர் சுனில் கிருஷ்ணன் நீண்ட பயணத்தின் துவக்கத்தில் இருக்கிறார். அவருக்கு இந்த விருது இப்போதே கிடைத்திருப்பது பெரும்பேறு. இதற்கு மட்டுமல்ல, இன்னும் பல உயர்ந்த விருதுகளுக்கும் தகுதி கொண்டவர்தான் என்று தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய அர்ப்பணிப்பும் உழைப்பும் அவரிடம் உண்டு. அவை தொய்வின்றி தொடர என் பிரார்த்தனைகள்.

oOo

23.6.2018 8:20 AM:

No comments:

Post a Comment