Thursday, April 8, 2021

நீலகண்டம்- கவிதா ஒரு கடிதம்


நீலகண்டம் வாங்க

நீலகண்டம் என்ற இந்த நாவல் வாசித்துக்கொண்டிருக்கும்போதே அன்னா கரீனினாவின்   புகழ்பெற்ற "மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன "  தொடக்க வாசகம் நினைவுக்கு வந்தது. நாவல் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தை வளர்ப்பு பற்றி பேசினாலும் அதோடு தொன்மங்கள், புராணக்கதைகள், நாட்டாரியல் குழந்தை கதைகள் போன்ற பல வகைமைகளில் ஒன்றுடன் ஒன்று தொடற்புறுத்தி சொல்லப்படுகிறது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட வர்ஷினி என்ற வரு வின் இளமைக்காலத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

நாவல், செந்தில் ரம்யாவின்  மன நுட்பங்களை விரித்து சொல்வதன் வழியாகவே அவர்களின் காதல், திருமணம், குழந்தை இல்லாதது பற்றிய ஏக்கங்கள், வருவை தத்தெடுத்தது போன்ற கடந்தகால நிகழ்வுகளை சொல்லிவிடுகிறது.வரமாக வந்த பிள்ளை, நோயோடு அவர்களின் சுமையாக மாறி மன அழுத்தங்களுக்கு இட்டுச்செல்லும் போது, இதென்ன வாழ்க்கை என் இப்படி நடக்கணும் என்ற கேள்வி எழாமலில்லை. மேதைகள் எல்லாம் ஆட்டிசம் குறைபாடு கொண்டவர்கள் என கண்டறிந்து வருவிடம் மேதமை தனத்தின் சாயலை ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்து கடைசியில் நம்பிக்கைகள் பொய்யாகி கரைந்து போவதை காண ரம்யாவுடனும் செந்திலுடனும் நானும் சேர்ந்து திகைத்து நின்றேன். என் குடும்பத்திலும் நெருங்கிய உறவில் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தை வளர்ந்து கொண்டிருப்பதை, அதனால் அந்தகுடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளை கண் கூடாக பார்த்துக்கொண்டிருப்பதால் ரம்யா செந்திலின் பிரச்சனைகளை என்னால் உள் வாங்கி புரிந்து கொள்ள முடிந்தது.

முக்கியமாக பேச வேண்டிய கதாபாத்திரம் செந்திலின் நண்பன் ஹரி. நீ இப்படித்தான் என்று சுட்டிக்காட்டுவது பெரிய வன்முறை என்றாலும், ஆழத்தில் மிகவும் விரும்பியதும் ஆம் என்று ஒத்துக்கொள்ளவும் செய்தது. ஹரியும் இயல்பில் எதிலும் தன்னை முற்றிலும் ஒப்படைத்துக்கொள்ளாத  மனிதர்களின், முக்கியமாக குடும்பம் ,காதல் , அன்பு போன்றவற்றின்  சமரசங்களை அதன்  வழியாக மனிதர்கள், அடையும் சௌகர்யங்களையும் அறிந்து அனைத்திலும் விலகியிருப்பவன். அவன் வழியாகவே செந்தில் ஓரளவு தன்னை அறிகிறான் போலும். நந்தகோபாலின் இளமைகாலம் பற்றிய கதை தெரிந்ததும், அவர் வருவிடமோ சாகரிடமோ நெருங்கும்போது சற்று பயமாக இருந்தது.

இடையிடையே வருவின் உலகத்தில் குழந்தை கதைகள் அதில் நம் தோழி வானவன்மாதேவி ஒரு பாத்திரமாக வந்து சக்தி வாய்ந்த மேகங்களை உறிஞ்சிய வாக்குவம் கிளீனரை தன் சக்கரக்கால்களால் கவ்விக்கொண்டு பறந்தது, போன்றவற்றை வாசிக்க மகிழ்ச்சியாக இருந்தது.வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அறம் பற்றிய கேள்விகள், அவை நிகழ்காலத்தில் தங்களின் பெற்றோர் செய்த செயல்களின் விளைவுகளுக்கு எவ்வாறு பொறுப்பாக முடியும் என்ற கேள்விகள், அறத்தினாலும், பக்தியினாலும், பாசத்தினாலும் உண்மையிலேயே பெரும் நன்மைதான் விளையுமா என்ற  கேள்வியை எழுப்பியது.

செந்திலின் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் நச்சு பருவம், அமுத பர்வம் என்ற இரு கதையாடல்களாக சொல்லப்படுகிறது. பெண் தெய்வமான நாகலட்சுமியின் கதை தொன்மம் இன்றும் நம் குடும்பங்களில் மரபிலிருந்தும் வேர்களிலிருந்தும் உயிர்ப்புடன் நிகழும் கதையாடல்கள்.

வரு காணாமல் போனது தெரிந்த போது செந்திலின் மன நினைப்பு மனிதர்களின் மனதின் கீழ்மைகளை தொட்டுக்காட்டியது. அது ஒன்று எப்போது அமுதென்பது நஞ்சாகிறது எதுவும் நஞ்சாகவும் அமுதாகவும் ஆகலாம் என்பதை சொன்னது. நாம் அனைவரும் மரபெனும் நீண்ட சங்கிலியால் பிணைக்கப்பட்ட கண்ணிகளே என செந்தில், ரம்யாஇவர்களின் குடும்பப்பிண்ணனி கதைகள் தொட்டுக்காட்டியது .

குழந்தையின்மை அதன் மூலமாக வரும் சமூக மதிப்பில் ஆண்களின் ஆண்மை கேள்விக்குள்ளாக்கப்படுவது அதன் தொடர்ச்சியாக குழந்தை உற்பத்தி முனையம் என ஒரு வணிக கட்டமைப்பு எழுவதை நாவலில் சற்று மிகைப்படுத்தி கூறியிருந்தாலும் இனி இது யதார்த்த உலகில் வேரூன்றி வருவது மறுக்கமுடியாதது .

சுடலை மாடனுக்கும், கிரேக்க துன்பியல் நாடக மைய கதாபாத்திரம் மெடியாவிற்கும் நடந்த உரையாடல் இறுதியில் கவிஞர் கலீல் ஜிப்ரானொடு நடக்கும் உரையாடல் அனைத்தும் நையாண்டியின் உச்சம் ,

நாவல் முழுதுமே வெளிப்படும் உரையாடல்களின் கூர்மை, சூழல் சித்தரிப்பின் துல்லியம் அதன் ஒப்பீடு, வாழ்க்கையின் குரூர பக்கங்கள் நினைவோட்டங்களாக வரும் நிகழ்வுகள் அனைத்தும் படைப்பாளியின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்றன. அந்த வகையில் என் மனதிற்கு நெருக்கமாக நீண்டநாள் பயணிக்கும் நாவலாக சுனிலின் நீலகண்டம் இருக்குமென்பது சந்தேகமில்லை .

வாழ்த்துக்கள் சுநீல் .

ப்ரியமுடன்

கவிதா 


அன்புள்ள கவிதா

நாவல் வெளியாகி ஒன்றரை வருடம் கடந்துவிட்டது. இப்போதும் உயிர்ப்புடன் வாசிக்கப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு ஆக்கத்தில் அந்தரங்கமான உண்மையை சுட்டிவிட முடியும்போது, காலகட்டத்தை கடந்து எக்காலகட்டத்திற்கும் உரிய கேள்வியை ஒரு ஆக்கம் தொடும்போது அது தொடர்ந்து வாசிக்கப்படும் என்பது என் நம்பிக்கை. இதன் வடிவ சிதைவுகளை மீறி அப்படி சில நரம்புகளை நீலகண்டம் தொடுகிறது என்பதில் நிறைவு கொள்கிறேன். வருங்காலங்களில் மேலும் வாசிக்கப்படக்கூடும். 

நன்றி 

சுனில் 




No comments:

Post a Comment