Sunday, April 11, 2021

இமாம் பசந்த் - அரவிந்தன் கடிதம்


வணக்கம் சார்…நலமா.?

கதை வாசித்த பின்னர் உடனே எதிர்வினையாற்றுவதை விட பல நாட்கள் கழித்து அது நினைவில் தங்கினால் அல்லது ஏதேனும் அது சார்ந்து சொல்ல இருக்கும் என்றால் அது ஒரு நல்ல கதை என்று கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.அப்படிபட்ட கதைக்கு ஒற்றை வரியில் விமர்சனம் தருவது நன்றாக இருக்காது பாருங்கள்.

இமாம் பசந்த் சூழலியல் சார்ந்த கதை என்பது ஒரு புறவகையான அடையாளம் தான்.தங்களின் 'திமிங்கலம்' அறிவியல் புனைகதை என்றாலும் அதில் கூட சூழலியல் சார்ந்த வாசிப்பை தரமுடியும் என்று படுகிறது இப்போது.காந்தியம் நுகர்வு பற்றி அதிகம் பேசுகிறது அது சார்ந்து காந்தி இன்று இதழில் கூட சில  கட்டுரையை வாசித்த நினைவு.அதனால் இதை தங்களின் புதுமுகம் என்று சொல்ல முடியாது.

கதையில் ஆறுமுகம் என்னளவில் முக்கிய பாத்திரம்.உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அறிவியலில் we live in the past என்ற கருத்துண்டு.அது கோட்பாடா என்று தெரியவில்லை. இருந்தாலும் அதை கருத்தில் கொள்ள வைத்தது இந்த கதை.அந்த கருத்து-மூலை நடக்கும் சம்பவத்தை சற்று தாமதமாக கிரகிக்கிறது என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால் நிகழ்காலம் என்ற ஒன்றே இல்லை என்றாகிறது. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் இரண்டு மட்டும் தான். கார்மேகத்தின் கருத்து என்பது ஒரு வகையில் ஆறுமுகத்தின் கருத்துதான். ஏனெனில் கார்மேகத்தை பழக்கியது அவர்தான். ஆனால் ஆறுமுகத்தின் கருத்து அவரின் குரலில் அல்லது தொனியில் அமைந்ததற்கு அந்த நிகழ்காலம் என்ற சிந்தனையை மறுப்பது தான் என்று தோன்றுகிறது.
நிகழ்காலத்தை அவ்வளவு எளிதாக வரையறுக்க முடியாது என்பது இதற்கு காரணமாக இருக்கலாம்.


சிவனுக்கு திருப்தி படும்படி பழம் கிட்டிவிட்டது. ஆனால் இந்த சிவன் அதாவது கார்மேகத்திற்கு திருப்தி அடைய வல்ல பழம் கிட்டவில்லை என்பது மற்றொரு இழை. 

ஆறுமுகத்திற்கு ஆறுமுகம் என்று பெயர் வைத்தது மிக கச்சிதம்.தந்தைக்கு உபதேசம் செய்வது வேறு ஒரு இழை என்று தொன்மங்கள் மிகவும் வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.


கடந்த காலம் அல்லது மரபு என்பது அளவுகோல். எதிர்காலம் எப்போதுமே அளவுக்கு உள்ளாக்கப்படுகிறது. அது எவ்வளவு முயற்சி செய்தாலும் அடைய முடியாத ஓர் இடம் ஒன்றுண்டு.

அது எதுவாக இருக்கும்? என்ற கேள்வியே இந்த கதையாக முடிந்ததோ என்னவோ?

அரவிந்தன்
திருகாட்டுப்பள்ளி


அன்புள்ள அரவிந்தன், 

மகனுக்குள் இருக்கும் தந்தையை அவனுடைய கடந்த காலத்தின் முகமாக கொள்ள முடியும். சமஸ்கிருதத்தில் மகன் பிறந்ததும் தந்தையால் சொல்லப்படும் மந்திரம் ஒன்று உண்டு. என் ஒவ்வொரு அங்கத்திலும் உருவான நீ நானே தான் எனும் பொருளை அளிக்கும் மந்திரம். காலத்தால் தடமழிவது ஒருவகையில் மீட்க முடியாதது. கடந்த காலத்தை மீட்க புறவயமாக எடுக்கும் முயற்சிகள் எல்லாமே பெரும் அழிவை கொண்டுவருபவை. கடந்த காலத்தை மீட்க நமக்கு வேறொரு வழி உண்டு. முற்றிலும் அகவயமாக, கற்பனையின் உதவியுடன் அனுபவத்தை மீள நிகழ்த்தி காண்பது. ஆனால் நாம் நினைவு என்றும் கடந்த காலம் என்றும் நம்புபவை உண்மையில் அத்தனை திடமானவையா? படைப்பு என்பதே ஒரு வகையில் மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தில் மாறாத ஒன்றை காலவெள்ளத்திற்கு எதிராக நிறுத்தும் மூடனின் கனவுதான். 

சுனில் 

No comments:

Post a Comment