Monday, February 14, 2022

நாற்கூற்று மருத்துவம்- ரா. கிரிதரன்

 ஆயுர்வேத மருத்துவர் இல. மகாதேவனுடன் நான் எடுத்த நேர்காணல் 'முதற்கால்' எனும் நூலாக  காலச்சுவடு வெளியீட்டுள்ளது.   அது குறித்து எழுத்தாளர் ரா. கிரிதரன் எழுதிய கட்டுரை சொல்வனம் இணைய இதழில் வெளிவந்துள்ளது. நன்றி 



மருத்துவர் இல.மகாதேவன் தெரிசனங்கோப்பில் ஆயுர்வேத மருத்துவராக அவரது பரம்பரை வைத்தியத்தை பயின்று வருகிறார். ஆயுர்வேதம் பற்றி அறிந்தவர்களுக்கு அவரைத் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்புகளையும் எல்லைகளையும் தனது சிகிச்சை வழியாகவும் மேடை உரைகள் வழியாகவும் பிரபலப்படுத்தி வருபவர். நவீன மருத்துவத்தோடு ஒட்டியும் விலகியும் அவர் பயின்று வரும் வைத்தியங்கள் ஆயுர்வேதத்தின் நவீனப் போக்கைத் தீர்மானித்து வருகிறது. இந்நூல் முழுவதும் ஒரே நேர்காணலைக் கொண்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவரும் எழுத்தாளருமான சுனில் கிருஷ்ணன் பல வாரங்கள் காத்திருந்து இல.மகாதேவனோடு இந்த நேர்காணலை நிகழ்த்தியுள்ளார்.


ஆயுர்வேதம் பற்றிய எவ்விதமான அடிப்படையும் தெரியாமல் இந்நூலைப் படிக்கத் தொடங்கினேன். இக்கால விளம்பரங்களிலும் தொலைக்காட்சி மேடை உரைகளிலும் ஆயுர்வேத முறைப்படி மருத்துவமும் மருந்துகளும் விற்கப்படும் வீச்சைப் பார்க்கும்போது நமக்கு பொதுவாக அதன் முறைமைகள் மீது அதிக அறிவு இருந்திருக்க வேண்டும் என நினைப்போம். எப்பொருளை எடுத்தாளும் மூலிகைகளின் படி சேர்த்த ரசாயனம், சித்தா முறைப்படி தயாரித்த பல் பொடி எனப் பலவிதமான எடுத்தாள்கைக்கு ஆயுர்வேதமும் சித்தா மருந்துகளும் உட்படுகின்றன. போலியான செய்திகளை அவை பரப்புவதோடு மட்டுமல்லாது நம் பாரம்பரிய சிகிச்சை முறைகளிலும் மருந்துகளிலும் இருக்கும் மகத்துவத்தைப் பற்றி மிகையான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பிவிடுகின்றன.


முழுவதும் நேர்காணலாக அமைந்திருக்கும் இந்நூலில் நான்கு விதமான விஷயக்கொத்துக்கள் நமக்குக் கிடைக்கின்றன.


ப்ராசீனமாக நமக்குக் கிடைக்கும் ஆயுர்வேத அறிவு

ஆயுர்வேத சிகிச்சை முறைகளையும் மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளைக் கூறும் சமஸ்கிருத புத்தகங்கள் பற்றிய அறிமுகம்.

பல்துறையோடு சேரும் ஆயுர்வேதம் எனும் சமன்வய ஞானம்

நவீன மருத்துவமும் ஆயுர்வேதமும் இணையும் அல்லது விலகும் புள்ளிகள்

மூல நூல்கள்


ஆயுர்வேதத்துக்கான மூல நூல்கள் பலவும் சமஸ்கிருதத்தில் உள்ளன.    சரக சம்ஹிதை, அஷ்டாங்க ஹ்ருதயம் போன்ற நூல்களைப் பற்றிய அடிப்படைகள் தமிழில் கிடைத்தாலும் முழுமையான மொழியாக்கங்கள் இல்லாதது ஒரு குறை என்கிறார். தமிழ் வழி படித்ததால் மகாதேவன் சமஸ்கிருத மூல நூலின் தத்துவங்களோடு நெருங்க முடியாததை ஒரு குறையாக முன் வைக்கிறார். ப்ராசீனமாகக் கிடைக்கும் ஆயுர்வேத அறிவு என்பது பல நூல்களில் பரந்துள்ளதால் விரிவான அறிவு கல்லூரிகளில் கிடைக்காது என்கிறார். பல வருடங்கள் தனிப்பட்ட முறையில் பயில்வதும், பயிற்சி செய்வதும் மூல நூல்களை தன்வசப்படுத்தும் வழி என அவர் கூறுகிறார்.


ஆயுர்வேதத் துறையின் பயிற்சிகள்


ஆயுர்வேதக் கல்வி என்பது பயிற்சியுடன் நூலறிவும் சேர்ந்த ஒன்றாகவே பார்க்க வேண்டும் என்பது மிக முக்கியமான பார்வையாக இந்நூலில் வெளிப்படுகிறது. மூல நூலில் கொடுக்கப்பட்டுள்ள வியாதியும் அதற்குண்டான சிகிச்சையும் அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு பிரத்யேகமான ஒன்று. அதில் சொல்லப்பட்டுள்ள மூளிகைகள் கால மாற்றத்தினால் கிடைக்காமல் இருக்கலாம், அதே போல ஆங்கில மருத்துவத்தின் முன்னேற்றத்தினால் பல நோய்களுக்கான அடிப்படைப்பார்வை முன் போல இல்லாமல் மாறி இருக்கலாம். இன்றைய காலத்தில் ஆயுர்வேதப் பயிற்சி என்பது மூல நூலை அப்படியே வழி மொழிவதோ, அப்பயிற்சிகளை எல்லா நோயாளிகள் மீதும் செயல்படுத்துவதோ அல்ல.


இன்றைக்கு ஆயுர்வேதம் படிக்க வரும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வி முடிவும் வரை மூலிகைகளை அடையாளம் காணும் ஞானம் வருவதில்லை என மகாதேவன் சொல்வதை நம் பிற துறை படிப்புகளோடு பொருத்திப் பார்க்க முடிகிறது. சமஸ்கிருத அறிவின் போதாமை, நம்மைச் சுற்றி இருக்கும் தாவரங்கள் பற்றிய அறியாமை, உடலின் முற்குணங்களைப் பற்றிய தெளிவு இல்லாமை, ஒரு குருவிடம் சென்று பயிலும் ஆர்வமோ வாய்ப்போ இல்லாமை போன்ற பல காரணங்களால் கல்லூரிப்படிப்பில் முழுமையான பயனை மாணவர்களால் பெற முடியாது என்கிறார் மகாதேவன். பொறியியல் போன்ற துறையிலும் இப்படிப்பட்ட போதாமைகளை நம்மால் பார்க்க முடிகிறது. விஞ்ஞானப் படிப்பின் அடிப்படைகள் பற்றி ஆர்வம் இல்லாததும், பயிற்சியாக எதையும் செய்யாமல் ஏட்டுப்படிப்பாக மட்டுமே இருக்கும் கல்வி அமைப்பின் சிக்கல்கள் இதோடு ஒத்துப்போகின்றன. ஆயுர்வேத மூல நூல்கள் சமஸ்கிருதத்தில் இருப்பது கூடுதல் சிக்கல். ஆனாலும் அது கடக்க முடியாத சிக்கல் அல்ல என்பதே மகாதேவனின் வாதம். ஆயுர்வேதம் போன்ற பன்முக ஞானத் தேவை இருக்கும் துறை, பிற அறிவுத் துறையிலிருந்து பலவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது அவரது அனுபவ அறிவு. நன்னூல், நாலடியார், திருக்குறள், சித்தர் பாடல்கள் போன்றவற்றில் ஆயுர்வேத அறிவின் சாரம் இருப்பதை அவரது ஒவ்வொரு பதிலிலும் நம்மால் பார்க்க முடிகிறது.


இன்றும் அவர் காலை நான்கு மணிக்கு எழுந்து மூல நூல்களயும், பிற தமிழ் நூல்களையும் படிக்கிறார். அதிலிருந்து கற்றுக்கொள்வதை நேரடியாகப் பயன்படுத்தாமல் நோயாளியின் தன்மை, நோயின் குறியீடுகள் போன்றவற்றைக் கொண்டு சிகிச்சை செய்கிறார்.


உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற்கூற்றே மருந்து


அது மட்டுமல்லாது ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சிப்பாதையை உற்று கற்று வருகிறார். இதனால் பிற ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் போல கிணற்றில் அடைந்து கிடைக்கும் பார்வை இவரிடம் இல்லை. ஆங்கில மருத்துவம், சித்தர் மருத்துவம் போன்றவற்றின் வளர்ச்சிகளிலிருந்தும் தோல்வியிலிருந்தும் அவர் தொடர்ந்து கற்று வருகிறார். அதோடு மட்டுமல்லாது அவற்றை சிகிச்சையிலும் செய்து காட்டுகிறார். உதாரணத்துக்கு ஆயுர்வேதத்தில் அவசர சிகிச்சைக்கு இடமில்லை என்பதை உணர்ந்திருப்பதால் நோயாளிகளின் குடும்பங்களுக்கு சரியான திசையைக் காட்ட முடிகிறது என்கிறார்.


இந்நூலின் ஆசிரியர் சுனில் கிருஷ்ணன் ஆயுர்வேத மருத்துவராக இருப்பதால் பல கேள்விகளை அவருடைய அனுபவத்திலிருந்தே கேட்டிருக்கிறார். இது ஒரு விதத்தில் ஆழமான விளக்கங்களைக் கோரி நிற்கிறது. குறிப்பாக ஆயுர்வேதம் பற்றிய அறிமுகமில்லாத வாசகர்களுக்கு ஒரு சிறு அறிமுகத்தைத் தந்திருந்தால் இக்கேள்விகளின் ஆழத்தை மேலும் அதிகமாகப் புரிந்துகொண்டிருக்க முடியும். பல சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு சிறு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் அவற்றை விரிவாகப் பேசமுடியா விட்டாலும், முடிவில் ஒரு அட்டவணையாகக் கொடுத்திருந்தால் மேலதிகத் தகவல்களை வாசகர்கள் அறிந்து கொண்டிருக்க முடியும். அதே போல, நவீன மருத்துவத்தை விட ஆழமான மருத்துவர் நோயாளி உறவையும், நோயாளி மருந்து அளிப்பவர் உறவு


ஆயுர்வேதத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும், மருத்துவர் மகாதேவன் அவர்களின் பங்களிப்பினால் இந்தக் கிளையானது எவ்வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையும் அறிந்துகொள்ள மிக முக்கியமான நூலாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, எவ்விதமான வியாதிகளுக்கு ஆயுர்வேதம் நல்ல சிகிச்சை அளிக்கிறது எனத் தெரிந்துகொள்ளவும், ஆயுர்வேதப் படிப்பை பயில விருப்பமுள்ளோருக்கும் நல்ல ஒரு வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது.


இதைத் தொடக்கமாகக் கொண்டு ஆயுர்வேதம் சார்ந்து மேலும் பல நூல்கள் தமிழில் வர வேண்டும் எனும் விருப்பத்தை அதிகரித்துள்ளது. இந்த நூலைத் தொகுத்த சுனில் கிருஷ்ணனும், இல. மகாதேவனும் முன்னெத்தி ஏராக இருப்பார்கள் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.


அச்சு நூல் விலை: ரூ. 120
மின் நூல் விலை: ரூ. 94
காலச்சுவடு இணையதள இணைப்பு
மின் நூலின் இணைய இணைப்பு
அச்சுநூலின் இணைய இணைப்பு

No comments:

Post a Comment