Monday, February 14, 2022

'முதற்கால்' முன்னுரை


முதற்கால் (டாக்டர் இல. மகாதேவன் நேர்காணல்)’

நேர்கண்டவர்: சுனில் கிருஷ்ணன்

ஆழ்ந்த அறிவு, சிரத்தையுடன் கூடிய அபாரமான உழைப்பு, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் வேட்கை, அசாத்தியமான ஆசிரியத்துவம், ஆயுர்வேதத்தை வெறும் மருத்துவ முறையாக மட்டுமின்றி முழுமையான வாழ்க்கைமுறையாகவே காணும் அணுகுமுறை முதலானவற்றைக்கொண்ட டாக்டர் மகாதேவன் இந்திய ஆயுர்வேத உலகில் ஓர் இயக்கமாக விளங்குகிறார் என்று சற்றும் மிகைப்படுத்தாமலேயே சொல்லலாம்.

ஆயுர்வேதத்தின் தற்காலச் சவால்கள், போக்குகள், நவீன மருத்துவத்திற்கும் அறிவியலுக்கும் அதற்குமான உறவு என வரலாற்று நோக்கில் ஆயுர்வேதத்தை இந்த நேர்காணல் அணுகுகிறது. நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைவதின் சாத்தியக்கூறுகள், அதிலுள்ள அறச்சிக்கல்கள், அதிகாரப் போட்டிகள் எனப் பலவற்றைக் குறித்து ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகள் இந்த நேர்காணலில் உள்ளன.

தத்தளிப்புகளின் ஊடாக மகாதேவன் மேற்கொண்டுவரும் ஆன்மிகப் பயணத்தின் தடங்களையும் இதில் காணலாம். நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவராக மட்டுமின்றி, மொத்த வாழ்க்கையையும் முழுமையான ஆரோக்கியத்தை நோக்கிச் செலுத்தக்கூடிய முழுமையான ஆயுர்வேத வைத்தியராகத் தனது இலக்கை அடையும் பயணத்தில் உள்ள மகாதேவன் என்னும் அலாதியான ஆளுமையையும் அறிந்துகொள்ளலாம்.

ஆயுர்வேதத்திலும் இந்திய மருத்துவ முறைகளிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி சாமானிய மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் இந்த நேர்காணல் அமைந்துள்ளது.

அச்சு நூல் விலை: ரூ. 120

மின் நூல் விலை: ரூ. 94

காலச்சுவடு இணையதள இணைப்பு

https://books.kalachuvadu.com/.../u0baeu0ba4u0bb1u0b95u0.../

மின் நூலின் இணைய இணைப்பு

https://www.amazon.in/dp/B09Q3KJX9D

அச்சுநூலின் இணைய இணைப்பு

https://www.amazon.in/dp/B09Q1D1GF1

முன்னுரை

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று இந்நேர்காணல் டாக்டர்.‌இல. மகாதேவன் வசிக்கும் தெரிசனம்கோப்பில் எடுக்கப்பட்டது. காலை ஐந்து மணிக்கு அவர் வீட்டை சென்றடைந்தபோது புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார். ஆறேழு மாதங்கள் முயன்று பெற்ற தேதி. அவரழைக்கும் நேரத்திற்கு என்னால் செல்ல முடியாத சூழல். வார இறுதிகளில் அவருக்கு ஓய்வோ விடுப்போ இல்லை. ஓருவழியாக இந்த தேதி முடிவானது.  முறையான நேர்காணலுக்கு முன்னும் பின்னுமாய் நிறைய உரையாடினோம்‌. காலை உணவுக்கு பிறகு மாலை 3.30 வரை இடைவெளிவிட்டு மொத்தம் ஐந்து மணிநேர உரையாடல் பதிவு செய்யப்பட்டது. நேர்காணல் இறுதி வடிவம் பெறுவதற்கு முன், காலமாற்றத்தை கருத்தில் கொண்டு  மேலும் சில கேள்விகளை அனுப்பி பதில் பெற்றுக்கொண்டு நேர்காணலை விரிவாக்கினேன். மகாதேவன் அவர்களுடன் காரில் பயணித்தபடியும் அவருடன் உள்நோயாளிகள் பிரிவில் அமர்ந்தபடியும் உரையாடினேன். ஏறத்தாழ ஒருமணிநேர உரையாடல் தொழில்நுட்ப பிழையால் பதிவாகாமல் போனது. இருவரையுமே அது சோர்வடையச்செய்தது. எனினும் அதே கேள்விகளை மீண்டும் கேட்டு பதில்களை பெற்றுக்கொண்டேன். ஒலிப்பதிவை அச்சு வடிவத்தில் ஆக்குவதே நேர்காணலில் ஆகக்கடினமான வேலை. படைப்பூக்கமிக்க எழுத்தாளர்களுக்கு அயர்ச்சியூட்டும் பணியும் கூட. அந்த பணியை  மகாதேவன் அவர்களின் செயலர் சஜுவும் சாராதா ஆயுர்வேத மருத்துவமனையின் இளம் மருத்துவர்களும் சிறப்பாக செய்து கொடுத்தார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.  முக்கியமாக சஜுவையே அடிக்கடி தொடர்புகொள்ளவும் தொந்திரவு செய்யவும் வேண்டியிருந்தது. இந்த நேர்காணலை நூலாக கொண்டுவரும் யோசனையை அளித்தவர் காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன். அவருக்கும் புத்தக வடிவமைப்பு மற்றும் பிழைதிருத்தத்திற்கு பொறுப்பேற்ற காலச்சுவடு நண்பர்களுக்கு நன்றி. அவருக்கான கேள்விகளை தயார் செய்ய உதவிய என் மனைவி டாக்டர். மானசாவிற்கும் நன்றி. டாக்டர். மகாதேவன் கோரிக்கையின் பெயரில் நூலுக்கு தெளிவான அணிந்துரை அளித்துள்ள கீழப்பாவூர் ஆ. சண்முகையா அவர்களுக்கும் நன்றி. நேர்காணல் அச்சாகும் முன்னர் வாசித்து கருத்துக்களை சொன்ன நவீன மருத்துவர் டாக்டர். மாரி ராஜ், யோக ஆசிரியர் சவுந்தர் மற்றும் நண்பர் சுபஸ்ரீ

ஏன் மகாதேவன் முக்கியமானவர்? ஏறத்தாழ எட்டு ஆண்டுகளுக்கு முன் சொல்வனம் இணைய இதழில் அவர் குறித்து 'பிஷக் உத்தமன்' எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அந்த கட்டுரையை சில திருத்தங்களுடன் இந்த நூலுக்கான அறிமுகமாக பயன்படுத்திக்கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளில் ஆயுர்வேத உலகத்திலும், தனியாக எனது ஆயுர்வேத மருத்துவ செயல்பாடுகளிலும் அவருடைய தாக்கம் பெருகியுள்ளதே தவிர குறையவில்லை‌. அன்றும் இன்றும் அவரை என் ஆசிரியராகவே கருதுகிறேன். ஒரு தனி மனிதர் எப்போது இயக்கமாகிறார்?  தனது சுற்றத்தையும் சம காலத்தையும் கடந்து தலைமுறைகளை தொட்டு அவர்களுடைய வாழ்வை நேரடியாகவோ மறைமுகமாகவோ மாற்றியமைக்கும் ஆற்றல் பெறும் போது தனி மனிதர் இயக்கமாக ஆகிவிட்டதாக கொள்ளலாம். டாக்டர். மகாதேவன், இந்திய அளவில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்களை பொறுத்தவரை அந்நிலையை அடைந்துவிட்டார்.  நான் எப்போதும் என்னை அவரது பள்ளியை சேர்ந்த வைத்தியனாகவே கருதி வருகிறேன். இந்த நேர்காணல் ஆயுர்வேதம் மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி சாமானிய மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையிலேயே தொகுக்கப்பட்டுள்ளது. இயன்ற வரை சமஸ்க்ருத சொற்களுக்கு தமிழில் பொருள் அளிக்க முயன்றிருக்கிறேன். ஆங்கில மருத்துவ கலை சொற்களுக்கு விளக்கம் கொடுக்க முயன்றிருக்கிறேன். அவருடைய மாணவனாக இந்த நேர்காணல் மிகுந்த நிறைவை அளித்தது. நேர்காணல் இரண்டு தன்மைகளை கொண்டுள்ளதை கவனிக்கிறேன். ஒருபக்கம், ஆயுர்வேதத்தின் தற்கால சவால்கள், போக்குகள், நவீன மருத்துவத்திற்கும், அறிவியலிற்கும் அதற்குமான உறவு என வரலாற்று நோக்கில் ஆயுர்வேதத்தை அணுகுகிறது. ஆன்மீகத்தையும் மதத்தையும் நீக்கிவிட்டு ஒரு மதச்சார்ப்பற்ற அறிவியல் துறையாக நவீன காலகட்டத்தில் ஆயுர்வேதத்தை நிலைநிறுத்தும் முயற்சி ஒரு முக்கியமான முன்னெடுப்பாக பார்க்கிறேன். ஆனால் இந்த மாற்றத்தினால் ஏற்பட்ட சிக்கல்களையும் இழப்புகளையும் சேர்த்தே மதிப்பிட  வேண்டும் என்பதை மகாதேவனின் நேர்காணல் உணர்த்துகிறது. இதற்கான தீர்வு குறித்த உரையாடலையும் தொடங்கிவைக்கும் என நம்புகிறேன்.  நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைவதின் சாத்தியக்கூறுகள், அதிலுள்ள அறச்சிக்கல்கள், அதிகார போட்டிகள் என பலவற்றை குறித்து இந்நேர்காணல் நல்ல விவாதங்களை ஏற்படுத்தும். மறுபக்கம்  மகாதேவன் எனும் தனிமனிதரின் பயணம். தத்தளிப்புகளின் ஊடாக அவரடைந்த ஆன்மீக பயணம் எனக்கு மிக முக்கியமானது. அவ்வகையில் அவர் முழு ஆயுர்வேத வைத்தியராக தனது இலக்கை அடையும் பயணத்தில் உள்ளார். இவ்விரண்டு தன்மைகளும் இணைந்தே நேர்காணலில் வெளிப்படுகிறது. இந்த நூல் அவர் ஆயுர்வேத சமூகத்திற்கு அளித்தவற்றுக்கான ஒரு சிறிய செய்நன்றியும் கூட. இந்த நூலுக்கு "முதற்கால்" என தலைப்பிட்டுள்ளேன். வெற்றிகரமான சிகிச்சைக்கு மருத்துவர், மருந்து, நோயாளி மற்றும், பரிசாரகர் (இன்றைய நோக்கில் செவிலி என சொல்லலாம். நோயாளியை கவனித்து கொள்பவர் என பொருள்) என நான்கு பாதங்கள் முழுமையாக அதன் இயல்புகளுடன் இருக்க வேண்டும் என சொல்கிறது ஆயுர்வேதம். அதில் முதலாவதும் மிக முக்கியமானதுமான பாதம் மருத்துவர். அதை குறிக்கும் வகையிலேயே இத்தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இந்த நூலை என் தந்தை காலஞ்சென்ற மருத்துவர். ராமச்சந்திரனுக்கு சமர்ப்பிக்கிறேன். தன் குறுகிய வாழ்நாளில் மக்கள் மருத்துவர் என பெயரெடுத்தவர். நினைவுகளாகவும் கதைகளாகவும் காலந்தோறும் அவர் பெருகுவதை காண்கிறேன். அவரேந்திய சுடர் அணையாமல் இருக்கட்டும். 

சுனில் கிருஷ்ணன்

10-5-21

காரைக்குடி


No comments:

Post a Comment