Monday, February 14, 2022

நாளைய காந்தி ஒரு வாசிப்பு


'யாவரும்' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'நாளைய காந்தி' குறித்தான தனது வாசிப்பை நண்பர் முத்துக்குமார் அவரது இணைய பக்கத்தில் எழுதியுள்ளார். நன்றி முத்து.  

https://www.commonfolks.in/books/d/naalaiya-gandhi 




 மலை உச்சியில் நின்று கொண்டு பார்த்த நகரத்தின் அசைவின்மையிலிருந்தெழுந்த அழகு, அதனை நெருங்கும் போது தொலைந்து நம்மை ஒரு விலக்கம் கொள்ளச் செய்கிறது. காந்தியை நெருங்கி அறிய முயலும் போது நமக்கு நடப்பதும் இதுவாகத் தான் இருக்குமோ என்று எண்ண வைக்கிறது எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் அவர்களுடைய ‘நாளைய காந்தி’ என்ற கட்டுரைத் தொகுப்பு. காந்திய ஆர்வலரும், காந்தி பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான இவர், இக்கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுவதும் இந்த விலக்கத்தைத்தானா என்று புரியவில்லை. காந்தியைப் பற்றி தொடர்ந்து எழுதி வரும் இவர், ‘காந்தியை வெறும் பண்டமாக மாற்றி விற்கிறேனா நான்?’ என்று கேட்டிருப்பது சற்று திடுக்கிடவும் வைக்கிறது. இனிமேல் நான் தொடர்ந்து காந்தியைப் பற்றி எழுதுவேனா? என்று தெரியவில்லை என்றும் குறிப்பிடுகிறார். இப்படி தொடர்ந்து அவரைப் பற்றி எழுதுவது மிகப் பெரிய சுமையாக இருக்கிறது என்று கூறுவது விலக்கத்தின் உச்சம். இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகளை விட இந்த முன்னுரையின் தாக்கம் அதிகம்.


The Holy Trinity


இந்த மாற்றத்தின் விதைகளை இக்கட்டுரைத் தொகுப்பில் கல்மலர் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகளில் கண்டு கொள்ள முடிகிறது. காந்தியை சமகாலத்தில் வைத்து எப்படிப் புரிந்து கொள்வது என்பதை எழுத்தாளர் ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ மிக நுட்பமாகவும், விரிவாகவும் வெளிப்படுத்தியிருக்கும். பள்ளிப் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களில் இருந்து நான் வார்ப்பெடுத்திருந்த காந்தியின் பிமபத்தை இப்புத்தகம் உடைத்து மறுவார்ப்பெடுத்தது. காந்தி என்ற பிம்ப மாயையிலிருந்து விலகி, அவரை ஒரு ஆளுமையாக அவருடைய குறை நிறைகளோடு நெருங்க முடிந்தது ‘இன்றைய காந்தி’ வாசிப்பிற்கு பின்புதான். ஆனால் ‘நாளைய காந்தி’ யின் வழியாக இன்னமும் நெருங்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணம் காந்தி எழுதிய மூன்று நூல்களான இந்திய சுயராஜ்யம், தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம் மற்றும் சத்தியசோதனை பற்றிய கட்டுரைகள் தான்.


சத்தியசோதனை என்பது, நேரம் கிடைத்தால் வாசிப்பதற்கு ஏதுவாக புத்தக அலமாரியில் இருக்க வேண்டிய புத்தகம் மட்டுமே என்ற பொது மனநிலையில் தான் தானும் இருந்ததாக சுனீல் இங்கு ஒப்புக் கொள்கிறார். கல்மலர் என்ற தலைப்பில் உள்ள மூன்று கட்டுரைகளும் காந்தி எழுதிய இம்மூன்று நூல்களையும் முழுதும் படித்த பிறகு சாகித்ய அகாடமியில் அவர் ஆற்றிய உரைகளின் கட்டுரை வடிவம்.


இந்திய சுயராஜ்யத்தை காந்தியுடைய அரசியலின் தத்துவ வடிவமென்றால், அதன் செயல்வடிவம் தான் தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம் என்று உருவகிக்கிறது இக்கட்டுரைகள். சுயராஜ்யம் ஒரு அறிவுஜீவியினுடையது என்றால், சத்யாகிரகம் ஒரு போர்ப்படைத் தளபதியினுடையது. சத்யசோதனை ஒரு ஆன்ம சாதகன் தன்னுடைய பயணத்தை ஆசானாக நின்று தன் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது. அபாரமான உருவகமிது.


ரயில்வே துறையை பரிசகிக்கும் காந்தி, தன் லட்சியங்களுக்காக அவற்றை உபயோகிக்காமல் இருக்கவில்லை. லட்சியத்தை அடைவதற்கான நடைமுறையில் ஏற்படும் சவால்கள் தன்னை பலகீனமாக்கினாலும், வெற்று கௌரவத்திற்காக அப்பலகீனங்களை மறைக்காத காந்தியின் எதார்த்தம் எந்த லட்சியவாதியையும் சீண்டக்கூடியது.


அகிம்சை என்பது கோழைகளின் அச்சத்தை மறைக்கும் ஆயுதமல்ல. வலியவர்களின் (உடல் சதையின் வலிமையல்ல) கையில் இருக்க வேண்டிய திசைகாட்டி.


கடமையுணர்வு உள்ளவர்களே உரிமையைக் கோரும் போராட்டத்தை சத்யாகிரக வழியில் நடத்தமுடியும்.


பழக்கப்படாத திரள் போராட்டத்திற்கு உகந்ததல்ல.


போராட்டங்கள் எதிரிகளை வெல்வதற்கான வடிவமல்ல. நம்முடைய அச்சங்களை நேர்மையாக எதிர்கொள்வதற்கான வடிவம்.


இப்படி காந்தியை நெருங்க நெருங்க நமக்கு கிடைக்கும் இந்த புரிதல்கள் தான் நம்மை பதற்றம் கொள்ளச் செய்கின்றன. அவரிடமிருந்து நாம் விலக்கம் கொள்வதும் இதனால் தான் என்று எண்ண முடிகிறது. அவருடன் சமகாலச் சூழ்நிலையில் வாழ்ந்தவர்களுக்கும் இப்பதற்றமும், விலக்கமும் இருந்திருக்க வேண்டும். நிகழ்காலத்தில் உள்ள நாமெல்லாம் எம்மாத்திரம்.


இறைவனை வணங்குவதும், பூஜிப்பதும் எளிய வழிகள் தான். அவனை அறிவது….காந்தியின் இம்மூன்று புத்தகங்களும் The holy Trinity என்று உணர வைத்தன இக்கட்டுரைகள்.

No comments:

Post a Comment