Monday, April 29, 2019

வெள்ளை யானை - சில வருடங்களுக்கு பின்

கடந்த ஞாயிறு 28.4.19 அன்று தஞ்சை இலக்கிய கூடல் நிகழ்வின் 25 ஆம் நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக வெள்ளை யானை நாவல் குறித்து உரையாற்ற  அழைக்கப்பட்டிருந்தேன். கே.ஜெ. அசோக் குமார் ஒருங்கிணைத்தார். நண்பர்கள் சுரேஷ் பிரதீப், கதிரேசன், கவியரசன், ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா, ராஜீவ் ஆகியோரும் நிகழ்விற்கு வந்திருந்தார்கள். கலியமூர்த்தி, சுரேஷ்பிரதீப், அருள் கண்ணன் ஆகியோர் நாவல் குறித்து உரையாற்றினார்கள். சுரேஷ் தன் உரையில் வரலாற்றின்மையை உருவாக்குவது எப்படி என்பது குறித்து பேசினார். வாய்மொழி மற்றும் எழுத்து மரபு சார்ந்து டி.தர்மராஜின் கருத்துக்கள் சார்ந்து அவருடைய உரை இருந்தது. படிமங்கள் வழி இந்நாவலை வாசிப்பது குறித்தும் பேசினார். குறிப்பாக தொப்பி, பங்கா போன்றவை எப்படியெல்லாம் உருமாறி வருகிறது. வெள்ளையானை எப்படி வாழ்க்கை பதிவு மற்றும் வரலாற்று நிகழ்வு எனும் இரண்டு வடிவங்களுக்கும் இடையிலான சமரச புள்ளியில் உருவாகி தலித் இலக்கிய பரப்பில் முக்கியத்துவம் பெறுகிறது என்றார். அருள் கண்ணன் வரலாறு மற்றும் புனைவு சார்ந்து சில கேள்விகளை எழுப்பினார். நாவலின் வடிவம் குறித்து சில அவதானிப்புகளை வைத்தார். 
இந்நாவலை மூன்றாம் முறையாக இந்த அரங்கிர்காக வாசித்தேன். முதல் முறை இந்நாவலை ஜெயமோகன் எழுதி முடித்து 'சொல்புதிது' குழுமத்தில் மொத்த நாவலையும் இரண்டு கோப்புகளாக ஏற்றி எல்லோருக்கும் வாசிக்க அனுப்பினார். பிறகு புத்தகமாக ஒருமுறை. ஏறத்தாழ ஒரு வருடம் இப்புத்தகத்தை உருவாக்க அலெக்ஸ் உழைத்தார். வெள்ளை யானை அவருடைய நினைவுகளை கிளர்த்தியது. இன்றும் கட்டு குலையாத சிறந்த புத்தகமாக இறுக்கியது. அதனுள் அவர் பயன்படுத்திய புகைப்படங்கள், அட்டைப்படம் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தார். ஒரு அக்டோபர் இரண்டாம் தேதி இந்த புத்தகத்தை எனக்கு அலெக்ஸ் கொடுத்தார். 2013 அக்டோபர் சொல்வனம் இதழில் இந்நாவலைப் பற்றிய முதல் மதிப்புரையை நான் எழுதினேன். அப்போது நாவல் பரவலாக வெளிசந்தையை அடைந்திருக்கவில்லை. பின்னர் பாரி செழியன் வெள்ளையானை நாவலுக்காக காரைக்குடியில் ஒரு அரங்கை ஒருங்கிணைத்தார். ஜெயமோகனும் வந்திருந்தார். வெ. அலெக்சின் நினைவுகளுடன் ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு பின் இந்நாவலையும் வாசித்து அக்கட்டுரையையும் திரும்ப வாசித்தேன். 


இது பழைய கட்டுரை. பெரிதும் மாறுபடவில்லை என்றாலும் சில மேலதிக புள்ளிகள் துலக்கமாயின. 

சுரேஷ் பிரதீப் தன் உரையில் கூறியது போல் படிமங்களின் பயன்பாட்டை நானும் இந்த வாசிப்பில் கவனித்தேன். தொப்பி, பங்கா, குதிரை, சாரட் வண்டி என எயடனின் மனநிலையை விளக்குபவையாக அவை நாவலில் உலா வருகின்றன.

யார் அல்லது எது வெள்ளை யானை எனும் கேள்வியில் இருந்து இந்நாவலை வாசிக்கலாம். நேரடியாக சொல்வது போல் அந்த ஐஸ் கட்டி வெள்ளையானை என்பது ஆரம்பக்கட்ட வாசிப்பு. ஒரு வகையில் எடனும் கூட ஒரு வெள்ளையானை தான். மொத்த ஆங்கிலேய காலனிய அரசும் வெள்ளை யானை தான் என வாசிப்பை விரித்து கொள்ளலாம். 

இந்த நாவலை அதிகாரங்களுக்கு இடையிலான போராக வாசித்திருந்தேன். இன்று வாசிக்கையில் இது சுய கண்டடைதல் நாவலாக தோன்றுகிறது. அல்லது கடவுள்களை தொலைத்த கதை. காத்தவராயன் முரஹரி ஐயங்காரை அவன் வணங்கும் பெருமாளின் வடிவில் கண்டு கொண்டதும் வைணவத்திலிருந்து வெளியேறுகிறான். கிறிஸ்துவின் முகம் ரோமானிய சீசரின் முகம் என உணர்ந்து, ஆதிக்கத்தின் முகத்தை கொண்ட கிறிஸ்துவை ஏடன் கைவிடுகிறான். அவனுடைய இயேசுவை ஒரு வெள்ளையானை நசுக்கி கொன்றது என சொல்கிறான். ஒரு பெரும் மாயை அழிவு அவர்களுக்கு நிகழ்கிறது. இதுவே இந்நாவலின் ஆன்மீக ஆதாரப்புள்ளி என தோன்றுகிறது. ஒரு ரஷ்ய நாவல் தன்மையை வெள்ளை யானை அடைகிறது. ஆனால் அங்கிருந்து ஒரு நவீனத்துவ ஆக்கமாக தன்னை வேறுபடுத்தி நிலைநிறுத்தும் புள்ளி என்பது மரிசாவின் பாத்திரத்தினால். குற்ற உணர்வில் ஏடன் மரிசாவை நாடிச் செல்கிறான். ஒருவேளை அவள் அவனை அரவணைத்து மீட்டிருந்தால் இது ரஷ்ய நாவல் தன்மை கொண்டதாக இருந்திருக்கும், அவளுடைய நிராகரிப்பு இந்நாவலின் தனித்துவம் என தோன்றுகிறது. 

எடனின் முதன்மை சிக்கல் தான் ஷெல்லி அல்ல என உணர்ந்து கொள்வது தான். ஷேல்லியாக தன்னை கற்பனை செய்து, அதுவாக ஆக முயன்று தோற்றவன் என்றே எனக்கு பொருள் படுகிறான்.  ஷெல்லி இம்மண்ணில் காலூன்ற முடியாது என உணரும் தருணத்திலேயே அவனிடம் நுண்ணிய மாற்றங்கள் நேர்கிறது. ஆண்ட்ரூ உணவு பெட்டியை வீசிவிட்டு இறங்கி செல்கிறான். ஏடன் திரும்பும் போது மொத்த மானுட இறப்பையும் புள்ளி விவரங்களாக, எண்ணிக்கைகளாக, தகவல்களாக தொகுத்து கொள்ளத் துவங்கிவிடுவான். ஷெல்லி - ஆந்தி கிறிஸ்து ஒப்புமை கவனிக்கத்தக்கது. 

பஞ்ச விவரணை முடிந்ததும் அதற்கு அடுத்த அத்தியாயம் விரிவாக டியுக்கின் அலுவலகத்தை, அவர்களின் ஆடம்பரத்தை சித்தரிப்பதாக அமைந்துள்ளதை இம்முறையே கவனித்தேன். இந்த முரண் மிகச் சிறந்த கதை யுத்தி. 

இரண்டு நெருடல்கள் இந்நாவலில் இருப்பதாக உணர்ந்தேன். ஒன்று, காத்தவராயனை ஏடன் சந்திக்கும்போது இது ஒரு சைவப் பெயர் ஆச்சே, நீர் வைணவர் என்கிறீரே என ஏடன் வினவுவது அவனுடைய பாத்திர வார்ப்பிற்கு முரணானது என தோன்றியது. அவன் இந்திய சமூக அமைப்பை புரிந்து கொள்ள முடிபவனாக இருக்கிறான் எனும் சூழலில் இத்தகைய அறிதல் ஒரு நெருடலை உருவாக்குகிறது. 

ஏடன், பார்மர், ஆண்ட்ரு, பிராண்ணன், போன்றோர் ஆங்கிலேய தரப்பில் மனித நேய பண்பு கொண்டவர்கள். மறு தரப்பாக மெக்கென்சி, டியுக், ரஸ்ஸல் ஆகியோரைச் சொல்லலாம். இந்திய ஆதிக்க சாதியின் முகமாக வரும் முரஹரி ஐயங்கார் மற்றும் நீலமேகம் போன்றோர் ஒரு தரப்பு. சாதி இந்துக்களின் சீர்திருத்தவாத முகமாக எவரும் நாவலில் இடம்பெறாதது ஒரு சமநிலை குறைபாடு என்றே இப்போது வாசிக்கையில் தோன்றுகிறது. 

இவை கடந்து இந்நாவல் ஆறு வருடங்களுக்கு பின்னர் மீள் வாசிப்பு செய்யும்போதும் புதிய தளங்களை திறக்கும் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. 


1 comment:

  1. Sir, the comments section in "1000 maninera vasippu" is not working. It's continuously refreshing. I couldn't fine your email address in this blog as well. Can we join the challenge now or its too-late?

    ReplyDelete