Tuesday, August 20, 2019

பெரும் படம் காணல்- நரோபா

சுழல மறுத்த நிலைக்காற்றாடியின் இரும்புச் சட்டத்தை கழற்றி விட்டு என்ன செய்தால் சுற்றும் என்று தெரியாமலேயே எதையாவது கழற்றி மாட்டினால் சுற்றிவிடும் எனும் ஐதீகத்திற்கு இணங்க பழுவேட்டையர் திருபுளியை வைத்துக்கொண்டு அமர்ந்திர்ந்தார். காலையிலிருந்து மனம் அமராமல் படபடத்துக்கொண்டிருந்தது. செவப்பட்டி சிங்காரம் செவப்பட்டி எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைக்காக வண்டை வண்டையாக திட்டியிருக்கிறான் என செய்தி வந்தது. நேற்றிரவு சினிமாவுக்கு வந்தபோது முட்ட பப்சும் போண்டாவும் வாங்கிக்கொடுத்தவன் காலையில் ஏன் இப்படிச் செய்தான் என புரியவில்லை. அறையின் ஒற்றைக் காற்றாடியும் ஓடவில்லை என்பதால் வெளியேயும் புழுங்கியது. அரவமற்ற தெருவில் கிடாரம் கொண்டானின் சைக்கிள் திணறும் ஒளியை துல்லியமாக கேட்க முடிந்தது. திருபுளியை போட்டுவிட்டு அவசர அவசரமாக கசன்சாகிசின் 'ஜோர்பா எனும் கிரேக்கன்' நாவலை எடுத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து ஜென் நிலைக்குச் சென்றார்.

கிடாரம் சைக்கிளைக் சுவரில் சாய்த்துவிட்டு அரக்கப்பரக்க ஓடிவந்தான். சுவரில் சாய்ந்து புத்தகத்தை திறந்து கண்மூடிக் கிடக்கும் பழுவேட்டையரைப் பார்த்ததும் சற்று அமைதியானான். ஓசையின்றி அதேநேரம் தான் வந்ததை அறிவிக்கும் அளவிற்கு சலனம் ஏற்படுத்தி அவர் முன் சப்பணமிட்டு அமர்ந்தான். மூன்று நிமிடம் ஆகியும் கண் திறக்கவில்லை என்றதும் கிடாரம் பொறுமையிழந்தான். அவனாக கூப்பிடும் வரை ஜென் நிலையைத் துறக்க முடியாத கடுப்பில் அவன் கூப்பிடுவதற்காக செவி கூர்ந்து காத்திருந்தார். கூப்பிட்டால் தவம் கலைந்துவிட்டது என திட்டுவாரோ என குழம்பி கிடாரம் காத்திருந்தான்.  பொறுமையிழந்து அரைக்கண்ணால் பழுவேட்டையர் பார்ப்பதற்கும் கிடாரம் "அண்ணே" என அழைபப்தற்கும் காலப்பொருத்தம் அபாரமாக இருந்தது.

"வா கிடாரம்..என்ன விஷயம்"

"அதானே இந்த செவப்பட்டி சிங்காரம் பிரச்சனையப் பத்தி ஒலகமே அல்லோலகலப்படுது..நீங்க என்னடான்னா இங்க இப்படி அமைதியா இருக்கீங்க"

"ஒலகமேன்ன? ஒலகமேவா"

"அட..ஒலகமேன்ன ஒலகம் இல்லைனே, நம்ம இலக்கிய உலகத்தச் சொன்னேன் "

"இலக்கிய உலகம் முழுக்கவா?"

"இலக்கிய உலகம்னா.. அப்படி  முழுக்க சொல்லிரமுடியாதுல. மரபு குருப்பு, ரமணிச்சந்திரன் குருப்பு.. இவங்கல்லாம் வேற இல்லியா...நாஞ்சொல்றது நம்ம நவீன இலக்கியப் பரப்புண்ணே"

கண்ணாடியை கழற்றி கைலியில் துடைத்துக்கொண்டே
"நவீன இலக்கியம் முழுக்கன்னு சொல்ற.."

தலையை சொறிந்துகொண்டான். "அப்படிச்சொல்ல முடியுமான்னு தெரிலண்ணே..எப்படியும் ஃ பேஸ்புக்ல இருக்குற முன்னூறு நானூறு பேராவது இருப்பாய்ங்க"

"அவ்ளோ பேரா இருக்காய்ங்க?"

"துல்லியமா சொல்ல முடியாது அண்ணே, ஃபேக் ஐடி, எல்லாம் கழிச்சா எப்படியும் முப்பது நாப்பது பேராவது இருப்பாய்ங்க"

பழுவேட்டையர் கண்ணாடியை அணிந்துக்கொண்டு துள்ளி எழுந்து அமர்ந்தார்.
"அப்புறம் என்ன மஸ்துகுடா ஒலகம் முழுக்கன்னு சொன்ன?"

"கோவிக்காத அண்ணே.. செவப்பட்டி சிங்காரம் இவ்வளவு சொல்லியிருக்கான். நீ எழுதுன செவப்பட்டி இலக்கிய வரலாறு ல முன்னூறு பேரச் சொல்லலைன்னு சொல்றான். மாலை மலர், சிறுவர் மலர், ஆண்டு மலர், அறுபதாம் கல்யாண மலர், காதுகுத்து போஸ்ட் கார்ட், நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே இரங்கல் அஞ்சலி போஸ்டர், பனமரத்துல வவ்வாலா தலைவனுக்கே சவாலா  பேனர் வாசகங்கள்ன்னு ஆதாரத்தோட அடுத்தடுத்து நீங்க புறக்கணிச்ச ஆளுமைகளை பத்தி வெளியிடுறான் அண்ணே, நீ அங்க வந்து எதாவது பதில் சொல்லலாம்ல"

பழுவேட்டையர் எழுந்து நின்றார். கைலியில் சுருட்டி வைத்திருந்த பீடியைப் பற்றவைத்துவிட்டு வானத்தைப் பார்த்தார். அங்கே பட்சிகள் பறந்து கொண்டிருந்தன. தொலைதூரத்தில் கூவும் குயிலின் ஓசை கேட்டது. சூரியன் அப்போதுதான் துலங்கத் தொடங்கியிருந்தான். ஆழ மூச்சிழுத்து விட்டார்.

"கிடாரம் நாம இதுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடாது. எழுத்தாளன் எப்போதும் ஒரு பெரியச் சித்திரத்த தான் பாக்கணும்"

"அவன் உங்க வாசிப்பு சரியில்லன்னு சொல்றான்"

இன்னும் நிதானமான குரலில் "நாம ஒட்டுமொத்த சித்திரத்தப் பாக்கணும்" என்றார்.

கிடாரம் குழம்பியது அவனுடைய முகத்தில் தெரிந்தது. "அண்ணே நீங்க வேணும்னே பலபேர விட்டுடீங்கன்னு சொல்றான்.."

தூரத்தில் ரயில் தடதடக்கும் ஓசை கேட்டது. நாசியில் பூத்த மல்லியின் வாசனை நுழைந்து கிறங்கடித்தது.

"கிடாரம்.. கொஞ்சம் நிதானமா யோசிக்கணும், சிங்காரம் நம்ம பய, ஏதோ பேசிட்டான், நமக்கு ஒரு ஒட்டுமொத்த பார்வை இருக்குல்ல" என்றான் நிதானமாக.

கிடாரம் எழுந்து கீழேக்கிடந்த சுழலாத நிலைகாற்றாடியை ஆவேசமாக உதைத்தான். "போடா லூசுக்கூதி அவன் நீ காசு வாங்கிட்டு எழுதுறன்னு சொல்றான், வாயத்தொறந்து எதாவது சொல்றான்ன ஒட்டுமொத்தப் பார்வை, பெரிய சித்திரம்னு, சொல்றா கண்டராவொளி ..என்னடா உன் ஒட்டுமொத்த பார்வை?"

கிடாரத்தின் ஆவேசம் பழுவேட்டையரை நிலைக்குலையச் செய்தது. அவன் எப்போதும் இந்தமாதிரி நடந்துகொண்டதில்லை. அவன் தோள் தொட சென்றபோது சிணுங்கி விலகினான்.

"கிடாரம்..இப்புடி உக்காரு..பேசுவோம்.. என்னடா பொசுக்குன்னு வார்த்தைய விட்ட.. அண்ணன் காசு வாங்கிருப்பேனாடா? இந்த ஓட்ட ஃபேனைப் பாத்தப்புரமும் எவனாவது சொல்வானாடா?"

கிடாரம் விசும்பி அழத் தொடங்கினான். "எனக்குத் தெரியும் அண்ணே..இருந்தாலும் ஊர் பெசுதுல"

தோளோடு அணைத்து அவனை ஆறுதல் படுத்தினார். "ஊர் ஆயிரம் பேசும் டா..போட்டும் விடு"

"அண்ணே இப்பயாச்சும் சொல்லு, அதென்ன பெரிய சித்திரம்?"

"அது வந்துடா..சொல்றேன்" என மெதுவாக ஆரம்பித்தார்.

"மொத்தம் நாலு யுகம் இருக்கு தெரியும்ல..சத்ய யுகம், கிருத யுகம், த்வாபர யுகம், கலியுகம்..அது அடுத்தடுத்து வரும். காலம் ஒரு சுழற்சி..பெரியச் சக்கரம்"

கிடாரம் ஆர்வமாகக் கேட்டான்.

கொஞ்சநேரம் யோசித்த பின் மீண்டும் தொடர்ந்தார் "சரி அதவிடு, இப்ப வேற சொல்றேன், இந்த பிரபஞ்சம் விரிவாகிட்டே இருக்கு, அது முன்ன குட்டியா ஒரு பந்தாட்டம் இருந்துதாம், வெடிச்சு விரிவாகிட்டே இருக்கு, திரும்ப அது சுருங்கி ஒண்ணுமில்லாம போயிரும்"

கிடாரம் குழப்பமாகப் பார்த்தான்.
அவனுடைய சங்கடத்தைப் புரிந்துகொண்ட பழுவேட்டையர்
"சரி இதையும் விடு இப்ப வேற சொல்றேன்..நம்ம பூமி முழுக்க ஒருகாலத்துல பனி உறைஞ்சு கிடந்துதாம்..அப்புறம் உருகிடுச்சாம்..இது திரும்பத் திரும்ப நடக்குமாம்..கண்டத் தட்டுகள் எல்லாம் நகந்துக்கிட்டே இருக்காம், இந்த உலகத்த காப்பாத்த, நாம வாழறதுக்கு எல்லாம் நாம எதுவுமே செய்ய முடியாது. நாம எதவாது செஞ்சாலும் இல்லைன்னாலும் உலகம் அழியத்தான் போகுது. புரியுதா? எல்லாம் சுழற்சிதான்"

கிடாரம் மேலும் குழம்பினான்.

பழுவேட்டையர் வானில் பறக்கும் பட்சிகளை நோக்கியபடி கிடாரத்தை நோக்கித் திரும்பிச் சொன்னார்

"இம்மாம்பெரிய பிரபஞ்சத்துள, சின்ன உலகத்துல, தக்குனூன்டு இலக்கிய உலகம் எம்மாத்திரம் சொல்லு?" என்றபோது அவருடைய முகத்தில் அபூர்வ ஒளி பரவியது.

கிடாரத்திற்கு புரிந்தமாதிரியும் இருந்தது, புரியாதமாதிரியும் இருந்தது.  உதைந்த நிலைக்காற்றாடியை நிமிர்த்தி வைத்துவிட்டு சிந்தனைவயப்பட்டவனாக "ஆகமொத்தம் அவனுக்கு நீ எந்த பதிலும் சொல்லப் போறது இல்ல..அதானே" என்றான். "அது அப்படி இல்லடா.." எனச் சொல்லத் தொடங்கியதும். கையை நீட்டி நிறுத்தச் சொன்னான். ஏதோ முனங்கியபடி அறையை விட்டு கிளம்பிச் சென்றான்.

நிலைக்காற்றாடி சட்டகத்தைப் பூட்டி ப்ளக்கில் செருகி சுவிட்சைப் போட்டுப்பார்த்தார். காற்றாடிச் சுழலத் துவங்கியது. 
"





    

1 comment: