Tuesday, March 17, 2020

எழுத்தாளர் பழுவேட்டையருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது

(நண்பர் நட்பாஸ் முன்பு குறுங்கதைகளுக்காக ஒரு தளம் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து இருமொழியாக வெளியிடுவது அதன் நோக்கம். அதற்காக எழுதிய குறுங்கதை. பிறகு அந்த இணையதளம் செயல்படவில்லை. இதன் ஆங்கில மொழியாக்கத்தை அடுத்த சுட்டியில் அளிக்கிறேன்.)

எழுத்தாளர் பழுவேட்டையருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. ஆம். நேற்றுதான். செக்கச் செவலென்று, ராசா மாதிரி இருக்கிறானாம். பட்டணத்து ஆசுபத்திரியில், அத்துவான ராத்திரியில், ‘சோ’ வென மழை கொட்டிக்கொண்டிருந்தபோது, அடி வயிற்றைப் பிளந்து கொண்டு, அழுகுரல் எழுப்பியபடி, வெளியே குதித்தானாம். தாயும் சேயும் நலமாம்.
வித்தகக் கவி கிடாரம் கொண்டான் கடை கடையாக ஏறி இறங்கினான், குழந்தைக்கு ஏதாவது வாங்கிச் செல்லலாமே என்று. பையைத் தடவிக்கொண்டே. “ த்தா.. பொருட்கள்..வெறும் பொருட்கள்.” என சலித்துகொண்டான்..

அப்போதுதான் அரும்பலம் கிளைநூலகத்தில் ஆட்டய போட்ட ‘போரும் அமைதியும்’ ஆங்கிலப் பிரதி நினைவுக்கு வந்தது. ஒரு முடிவோடு, புத்தகத்தை போத்தீஸ் கவரில் சுற்றிக்கொண்டு குழந்தையைப் பார்க்க சென்றான், மிடுக்காக. செவ்வியல் எழுத்தாளருக்குப் பிறந்த செவ்வியல் குழந்தைக்குச் செவ்வியல் எழுத்தாளன் எழுதிய செவ்வியல் ஆக்கத்தை பரிசளிப்பதே செவ்வியல் கவிஞனாய் தான் செய்ய வேண்டியது என உறுதி செய்து கொண்டான்.

பழுவேட்டையர் தடித்த கறுப்பு கண்ணாடியைக் கழட்டிவிட்டு, ‘எலேய் கிடாரம்,’ என சிரித்தபடி தழுவிக் கொண்டார். போனவார கவிதை குஸ்தியில் ஒரு மேற்பல் பாதியாக உடைந்திருந்தது புலப்பட்டது.

இப்போதுதான் மனைவியை பிரசவ வார்டிலிருந்து அறைக்கு மாற்றியதாகச் சொன்னார். குழந்தைக்கு, பிறந்ததிலிருந்து மஞ்சக் காமாலை, ஆகவே ஒரு பெரிய விளக்கடியில் தனியறையில் வைத்திருக்கிறார்கள் “போய்ப் பார்த்துவிட்டு வா” என்றார்.

‘உஸ்ஸ் அமைதி’ என்று ஒட்டப்பட்டிருந்த கண்ணாடி அறைக்குள் ஒரேயொரு ஒடிசலான செவிலி கைபேசியில் எதையோ பார்த்து மென்நகை புரிந்து கொண்டிருந்தாள். நான்கைந்து குழந்தைகள் உள்ளே இருந்திருக்கலாம். அப்போது அறை மூலையிலிருந்து, மிகப் பிரகாசமான ஒளி வெள்ளத்தில் ‘’கர்த்தாவே… திரும்பவும் தால்ஸ்தாயா? மாமா… உங்களிடம் டி.எச். லாரன்ஸ் புத்தகம் ஏதும் இல்லையா?’ குட்டி பழுவேட்டையன், தன் கையில் இருந்த தாஸ்தாவெஸ்கியின் ‘குற்றமும் தண்டனையையும்’ஐ மூடிவைத்துவிட்டு கேட்டான்.


No comments:

Post a Comment